பட்டு நூல் உற்பத்தி

பட்டுப்புழுவின் கூடு ஒரே நூலால் உருவாக்கப்பட்டவை. ஒரு கூட்டில்  500 முதல் 1000 மீட்டர் வரை பட்டு இழை இருக்கும். பட்டுப்புழு கூடு கட்டிய பத்து நாட்களுக்குள் கூட்டிலிருந்த நூலை பிரித்தெடுக்கவேண்டும். பத்து நாட்களுக்கு பிறகு பட்டுக்கூட்டின் உள்ளே இருக்கும் கூட்டுப்புழுவானது உருமாற்றம் அடைந்து அந்துப்பூச்சியாக கூட்டை உடைத்துக் கொண்டு வெளியேறும். இதனால் பட்டு இழை ஒரே நூலாக பிரித்தெடுக்க இயலாமல் போகும்.

பட்டு நூலை பிரித்தெடுக்க பட்டுக்கூடுகளை சுடுநீரில் அமுக்கி வேகவைக்கவேண்டும். இதனால் பட்டு இழைகளுக்கிடையேயான பிசின் இளக்கமடைந்து பட்டு இழைகைளை பிரித்தெடுக்க ஏதுவாகும். இவ்வாறு பிரித்தெடுப்பதற்கு நாட்டு சர்க்கார் முதல் முழுமையான தானியங்கி இயந்திரம் வரை பல்வேறு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பட்டு இழைகளை நூற்கும்போது தேவைக்கு ஏற்ப 6 முதல் 10 பட்டுக்கூடுகள் வரை ஒன்றிணைந்து நூலாக நூற்கப்படுகிறது. பின்னர் இவ்வாறு பிரித்தெடுக்கப்படட நூலிழைகள் இரண்டை ஒன்றாக முறுக்கேற்றப்பட்டு பாவிற்கு நெசவில் பயன்படுத்தப்படுகிறது.

Silkworm post cocoon Post cocoon

            பாவு மற்றும் ஊடு நூலிழைகள் சோடாகாரம் மற்றும் சோப்புடன்  சேர்த்து கொதிநீரில் முக்கி வெளுக்கப்படுகின்றன. பட்டுக்கூட்டின் நிறம் என்னவாக இருந்தாலும் அவை வெளுக்கப்பட்டே பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு வெளுக்கும் போது பட்டு நூழிலையின் வெளியே படிந்திருக்கும் செரிசின் என்பபடும் பசைப் பொருள் நீக்கப்படுகின்றன. இவ்வாறு பசைப்பொருள் நீக்கப்பட்டு வெளுத்த இழைகள் சாயம் தோய்க்கப்பட்டு பட்டு நூலிழைகள் தயாராகின்றன.

இவ்வாறு பசைப்பொருள் நீக்கப்பட்டு வெளுத்த நூலிழைகள் சாயம் தோய்யக்கபட்டு தறியில் நெசவு செய்யப்படுகிறது. ஒரு பட்டுப்புடவைக்கான நூலைப்பெற சுமார் 4000 முதல் 5000 பட்டுக்கூடுகள் தேவைப்படும்.

            பட்டுப்புடவைகளுக்கு தனிச் சிறப்பைத் தருவர் சரிகை. மெல்லிய பட்டு நூலின் மீது வெள்ளி கம்பியை சுற்றி அதன் மீது தங்கம் பூசப்பட்டு சரிகை தயாரிக்கப்படுகிறது. ஒரு கிலோ சரிகையில் 7 முதல் 8 கிராம் வெள்ளி மற்றும் தங்கம் இருக்கும். ஒரு கிலோ சரிகையின் விலை சுமார் இருபதாயிரம் ரூபாயாகும். பெரும்பாலும் சரிகை குஜராத் மாநிலம் சூரத் நகரிலிருந்து வாங்கப்படுகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரத்திலும் சரிகை தயாரிக்கப்படுகிறது.

            பட்டுப்புடவையின் கரை மற்றும் முந்தியிலுள்ள பலவகை வேலைப்பாடுகள் செய்ய சரிகை பயன்படுகிறது. சரிகையின் அளவைப் பொருத்தே பட்டுப்புடவையின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

  • பாரம்பரிய கலைஞர்களால், காஞ்சிபுரம், ஆரணி, காசி, பெர்காம்பூர், போச்சம்பள்ளி பகுதிகளில் பட்டு நெசவுத் துணி வகைகள் (புடவை, வேட்டி வகைகள்) கலையழகுமிக்கதாக இந்திய கலாச்சார சிறப்பை எடுத்துக் காட்டுகின்றன. இந்திய திருமண, மத சடங்குகளில் பட்டின் தேவை இன்றியமையாதது.
  • அறுவை சிகிச்சையில் தையலுக்குப் பயன்படுவது பட்டு இழைகளே.
  • பாராசூட் மற்றும் விண்வெளி ஓடங்களில் பட்டுக்கயிறுகள் பயன்படுகின்றன.
  • பட்டுக்கூடுகளிலிருந்து பிரித்தெடுக்கும் புரதம் மருந்துப்பொருளாகவும் ஊட்டப்பொருளாகவும் பயன்படுகிறது.
  • பல்வேறு வகை ஒப்பனைப் பொருட்களினல் பட்டுக்கூடு புரதம் சேர்க்கப்படுகிறது.
  • பட்டுப்புழு கூட்டுப்புழு பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகின்றன.
  • பட்டுப்புழு வளர்ப்புக் கழிவுப்பொருட்கள் கால்நடைத் தீவனம் மக்கிய உரங்கள், மண்புழு உரம் ஆகியைவ தயாரிக்கப் பயன்படுகின்றன.
  • பட்டுக்கூடு சுத்திகரிப்பு தொழிலில் கழிவுப் பொருட்களான கூட்டுப்புழுவின் மேலோடு கைட்டின், கைட்டோன் போன்ற மருந்துப்பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகின்றன.
  • பலவகைப் பொருட்கள் தயாரிப்பில் மல்பெரி வேர், இலை ஆகியவை பயன்படுகின்றன.
  • அதிவேக சைக்கிள் பந்தயங்களில் பட்டு இழைகளைக் கொண்டு இரப்பர் சக்கரங்கள் தயாரிக்கப்படுகின்றன.
   
 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014